பகடியின் நடனம்




காரல்மார்க்ஸின் பிறந்த தினமான மே ஐந்து வெளிவருகிறது அமல்நீராடின் இயக்கத்தில் C.I.A Comrade in America என்பதின் சுருக்கமே இந்த C.I.A.
பெயரில், அதன் வடிவமைப்பில், நிறத்தில் திரைப்படத்தின் கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது.
காலகாலமாக C.I.A கம்யூனிச அரசுகளை வீழ்த்துவது அதற்குகான சதி வேலைகளில் ஈடுபடுவதே அதன் லட்சியமாக கொண்டது.
அதன் பெயரை ஒரு இடதுசாரியின் கட்சியின் நிறத்தில், தன்மையில் குறிப்பாக லத்தின் அமெரிக்க இடதுசாரிக் கட்சியின் கொடிபோல வடிவமைப்பதிலேயே தொடங்கிவிடுகிறது பகடி.
ஏப்ரல் மாதத்தில்தான் ‘சகாவு’ மலையாள சினிமாவில் தோன்றி வாய் ஓயாது பேசிவிட்டு போனார். அந்த பாவக்கரையை கழுவதுபோல் வந்து சேர்ந்திருக்கிறது C.I.A.
படத்தின் முதல் பாதி முழுக்க பகடி பகடி.
இடதுசாரிக் கட்சியில் தீவிரமாக செயல்படும் அஜியின் மீது (அவனது தந்தை கேரள காங்கிரஸில் செயல்படுபவர்) ஒரு அமெரிக்க வாழ் மலையாளப் பெண் (படிக்க கேரளம் வந்தவர்) காதல் வயப்பட அது வீட்டாருக்கு தெரிந்து அவள் அவசர அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டு திருமண ஏற்பாடு நடக்கிறது. அவள் அஜியிடம் என்னை அமெரிக்கா வந்து காப்பாற்று என்கிறாள்.

இடதுசாரியான அஜியிடம் பாஸ்போர்ட் இல்லை. பாஸ்போர்ட்டை சிரமப்பட்டு வாங்க அத்தனை குறுகிய காலத்தில் அமெரிக்க விசா கிடைக்க சாத்தியமே இல்லை என்கிறார்கள் அதுவும் அஜிக்கு விசா தருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
அமெரிக்காவிற்குள் கள்ளத்தனமாக நுழையும் பாதையின் வழி அஜி அமெரிக்காவிற்குள் நுழைய தீர்மானிக்கி்றான். தோழர்களும் குடும்பத்தாரும் அவன் நேரடியாக அமெரிக்கா தான் போகிறான் என நம்பிக்கொண்டிருக்க மெக்ஸிக்கோ வழி பல இன்னல்களுக்கு இடையே நுழைகிறான் நாயகன் நாயகியையும் சந்திக்கிறான். நாயகியோ சந்தோஷமாக அவளுடைய திருமணத்திற்காக தயாராகி திருமண வரவேற்பில் நிற்கிறாள் அஜியை பார்த்து ‘நீ வரமாட்டன்னு நினைச்சேன்’ என்கிறாள். அஜி அதற்கு ‘உன்னத் தேடிவந்த இந்த பயணம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுத் தந்தது அது வாழ்க்கைக்கும் எனக்கு பயன்படும் என்று சொல்லியவனாய் வேட்டிய மடித்துக் கட்டியவனாய் திரும்புகிறான் அஜி.

அஜி அமெரிக்க போவதைப்பற்றி அவனுடன் மார்க்ஸ், லெனின், சேகுவாரா மூவரும் இரவில் விவாதிக்கின்றனர். (அஜி குடித்துவிட்டு கட்சி அலுவலகத்தில் உறக்கும் ஒரு ராத்திரியில்தான்). அஜி அவர்களோடு வாதம் செய்கிறான். மார்க்ஸ் ‘நீ காதலுக்காக இப்படி அமெரிக்காவுக்கு போக வேண்டுமா’ எனக் கேட்கிறார். அஜி அதற்கு ’நீங்கள் ஜென்னிக்கு எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களை நானும் வாசித்திருக்கிறேன்’ என்கிறான். மார்க்ஸ் வெட்கப்படுகிறார். சேகுவாரா அவனை ஆதரிக்கிறார். காதலுக்காக அப்படித்தான் போகவேண்டுமென்கிறார். பகடி செய்து தீர்க்கிறார்கள்.
மலையாள சினிமாவின் பிரத்யேகத்தன்மை அதன் நகைச்சுவையும் பகடியுமே அது நேர்த்தியாக இந்த சினிமாவில் வந்திருக்கிறது.
இரண்டாவது பாதியில் அமெரிக்காவிற்குள் கள்ளத்தனமாக நுழையும் அந்த பயணம். வெறும் விக்கிப்பீடியா தகவல்களாக தொகுக்கப்பட்டதைப் போல இருக்கிறது. துயர்மிகு அந்தப் பயணத்தின் வலி நிகழ்த்தப்படவில்லை.

சமீப மலையாள சினிமாக்களின் நற்போக்குகளில் ஒன்று தமிழர்களை ‘நல்லவிதமாக’ சித்தரிப்பது. அண்மையில் வெளியான ரஞ்சித்தின் ‘புத்தன் பணம்’ திரைப்படத்தில் பிரதான பாத்திரமாக ஒரு தமிழ்த் தாயும் மகனும் உண்டு. கடைசி வரை அவர்களை சிதைக்காமலே காட்டியிருந்தார்கள்.
C.I.A. விலும் ஒரு ஈழத்தமிழர் கதாபாத்திரம் உண்டு. மோசமில்லாமல் சித்தரித்திருக்கிறார்கள். பழைய போராளியான அவர் அஜி மிஷின் கண்ணை எடுத்து சரமாரியாக சுடும்போது (கேரள இடதுசாரிகள் துப்பாக்கியை போலீஸிடம் மாத்திரமே பார்த்திருப்பார்கள்) வெறுமனே வேடிக்கை பார்க்கிறார் என்பது போன்ற சில அபத்தங்கள் இருந்தாலும்.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் பொதுவாக வாத்தியங்களை உரக்க வாசிப்பதில் பிரியம் கொண்டவராய் இருந்தாலும் இந்தப்படத்தில் சில அருமையான பாடல்களை தந்திருக்கிறார். குறிப்பாக கள்ளத்தனமாக மெக்ஸிக்கோவுக்குள் நுழையும் அந்த பயணத்தில் ஒரு ஸ்பெனியக் குரலோடு பின்பு ஹிந்தி, மலையாளம் என குரல்கள் மாறும் வானம் திளைதிளைக்கன்னு என்ற அருமையான பாடலை தந்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் வரும் டைட்டில் பாடலில் தமிழ் வரிகளெல்லாம் புரட்சி குறித்து ஒலிக்கின்றன.
சமீபத்தில் மலையாளத்தில் இடதுசாரி ‘போற்றி போற்றி’ வகைப் படங்களான ஒரு ’மெக்ஸிகன் பிரவுதா’ ‘சகாவு’, போன்றவற்றிலிருந்து மாறுபட்டு. திரை மொழியோடு கூரிய அங்கதத்தோடு வெளிவந்திருக்கிறது C.I.A.

பொதுவாக C.I.A எப்பொழுதும் நேசிப்புக்குரியது இல்லை. இந்த C.I.A. நேசிப்புக்குரியது.
 மே -2017 தமிழ் இந்து

Comments